Sunday, April 24, 2011

இது முன்பனிக்காலம்! (6)

அவன் எழுந்து எனக்கடுத்திருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.முதல் வகுப்பிலிருந்த பயணிகள் எங்களையே வெறித்துக்கொண்டிருந்தனர்.முதல் வகுப்பு பயணிகள் என்பதால் எந்த எதிர்ப்போ விமர்சனமோ இன்றி பார்த்துக்கொண்டிருந்தனர்.இதுவே இரண்டாம் வகுப்பாயிருந்தால் எங்கள் பிரச்சினைக்கு பெரிய கவரேஜ் கிடைத்திருக்கும்.நல்லவேளை!அந்த சிறிய கவனம் பெறுதலே மூவருக்கும் அசௌகரியமாக இருந்தது.
முந்தைய சந்திப்பைப்போல இந்த சந்திப்பிலும் நாங்கள் அமைதியாகத்தான் இருந்தோம்.திடீரென எனக்கு அந்த முகபுத்தக திருமணநிலை பகிர்வும்,அதை பின்தொடர்ந்த அந்த இரவும் நினைவுக்கு வந்தது.அவனோடு அமர பிடிக்கவில்லை,அவனை பார்க்கவும்.அடுத்த நிறுத்தத்தில் ரயில் நின்றது.அந்த ஆளில்லாத நிலையத்தில் ரயில் அரை நிமிடம்கூட காத்திருக்காது.கார்ட் வந்து பச்சைக்கொடி காண்பிக்கும் நேரம் சட்டென்று இறங்கிவிட்டேன் நான் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கு வெகுமுன்பாகவே.ரயில் நகரத் தொடங்கியது. சற்றும் எதிர்பாராமல் திடுக்கிட்ட இளாவிடம் “நான் இன்னிக்கு லேட்டா வர்றேன்,நீ போ”,என்று கத்திவிட்டு கை காண்பித்தேன்.நான் எதிர்பார்க்காத வகையில்(ஒரு வேளை எதிர்பார்த்திருந்தேனோ!) அவனும் ரயிலிலிருந்து சட்டென்று குதித்தான்.இப்போது ரயில் எங்கள் இருவருக்கும் டாட்டா காண்பித்துவிட்டு சென்றுவிட்டது.
ச்சே,ரயிலிலிருந்து தனியா குதிக்கக் கூட எனக்கு ரைட்ஸ் இல்லையா? நான் அவனை வெளுவெளுவென வெளுக்கும் வெறுப்பில் இருந்தேன்
“நீங்க எதுக்கு இப்ப எறங்கினீங்க?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் சீதா”
“என்ன ஏன் பிடிக்கலன்னு ரீசன் சொல்றதுக்கா?”
“உங்க ஃபிரெண்ட் மாதிரியே நீங்களும் எகிறாதீங்க,உங்களுக்காகத்தான் அவங்கள சும்மா விட்டேன்”
 “அவ என் ஃப்ரெண்டுங்க,எனக்காக யோசிக்கிறவ,அப்டித்தான் பேசுவா,அவ கேட்ட ஒரு கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியுமா,அவள பத்தி பேசறதெல்லாம் வச்சிக்காதீங்க,எல்லாம் எங்க அப்பாம்மாவ சொல்லனும்”
“உங்கப்பாம்மாகிட்டயும் சொன்னேங்க,அவங்கதான் முடியாதுன்னு சொன்னாங்க”
“ஹலோ இதென்ன புது கத கெளப்பி விடுறீங்க?”
“தயவு செஞ்சி ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க”,என கையை ஒரு நட்சத்திர உணவு விடுதியின் சேவகன் பதிவு செய்திருந்த இருக்கையில் அமர காட்டுவதுபோல சில்லென்ற இரும்பு பெஞ்சு ஒன்றை காட்டி கெஞ்சினான்.நான் போனால் போகட்டுமென்று அமர்ந்து கேட்க ,அவன் சொல்லத்தொடங்கினான் நான் அறியாததை.
அவன் எல்லோரையும் போல் இருக்க விரும்பவில்லையென்று.அவனுக்கு உறுப்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று அரிப்பு இருந்ததை.அதற்காக பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஒரு பள்ளி ஆரம்பித்ததை.ஆனால் குறைந்த கட்டணத்தோடு மிகப்பெரிய கட்டிட வசதியின்றி சாதாரணமாய் இருந்த பள்ளி மக்களுக்கு பிடிக்கவில்லை.லாபம் இல்லையென்றாலும் பரவாயில்லை,கடன் கட்டித்தான் தொடர்ந்து நடத்தும் சூழ்நிலை வரவும் பள்ளிவேலைகளை நிறுத்திவிட்டு வேலை செய்ய ஆரம்பித்து இப்போது கொஞ்சம் கடன் அடையத்தொடங்கி  இருக்கிறது.அவனுக்கு பிரத்யேகமாக கல்யாணத்திலோ,மென்பொருள் வேலையிலோ விருப்பமில்லை.என்னைப்போலவே பெற்றோரின் தொனதொனப்பு தாங்காமல் பார்க்க வந்தானாம்.ஆனால் கடன் இன்னும் சில லட்சங்களில் பாக்கி இருப்பதும்,அந்த பள்ளியை சரிப்படுத்த வேண்டிய கட்டாயமும் துரத்த கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம்.
“கண்டிப்பா நான் இதே வேலையில இருக்க மாட்டேன்,என்னோட ஆசை என்னோட மனசுல இருக்கற மாதிரியே ஒரு மாடல் ஸ்கூல என் கைக்காசுக்கு அடி விழாம உருவாக்கறதுதான்,இன்னொருத்தங்கள அதுக்கு நான் கட்டாயப்படுத்தவோ ஏமாத்தவோ கூடாதுல்ல,அதான் கல்யாணம் வேணான்னுட்டேன்”
‘கடன அடச்சிட்டு கல்யாணம் பண்ண யோசிச்சிருக்கலாமே’,என கேட்க நினைத்தாலும் அது என்னைப் பற்றி யோசித்திருக்கலாமே என நானே கேட்பதைப்போல் இருக்கும் என்பதால் அமைதியாக இருந்தேன்.
 “ஆனா எங்க அப்பாம்மாவால அப்டி இருக்க முடியல,உங்கள பாத்ததுக்கு அப்றம் எனக்கு தோனுனத உங்கப்பாம்மாகிட்ட சொன்னேன்,ஆனா அவங்க அத ஒத்துக்கல”
“எத ஒத்துக்கல?”
“ஒரு வருஷத்துக்கப்புறம் கடன அடச்சிட்டு கல்யாணத்த வச்சுக்கலாமேன்னு அப்பா உங்க வீட்டுல கேட்டாங்க,ஆனா அவங்க முடியாதுன்னிட்டாங்க”
இவன் எப்படி நான் யோசிப்பதையெல்லாம் சொல்கிறான்.என் முகம் அவ்வளவு துல்லியமாகவா உணர்வுகளை படம் போடுகிறது?இல்லை மேஜிக்கல் சயின்ஸ் ஸ்டூடண்டா?
So you mean?
"yes,எனக்கு உங்கள பிடிச்சிருந்தது,ஆனா நெறய யோசிக்க வேண்டி இருந்தது"
“நீங்க சொல்றதெல்லாம் உண்மையா?எங்க வீட்ல சொல்லவேயில்ல”
“அதுசரி,எந்த வீட்டுல சொல்வாங்க?உங்க நம்பர் கேட்டேன்,சாரி சொல்றதுக்கு,திட்டிவிட்டுட்டாங்க!”,என்றான் ஒரு ஸ்மைலியைப்போல் சோகமாக. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவன் தவறுமில்லை ஆனால் அதற்கு வேறு யாரும் பொறுப்பேற்கவும் முடியாத நிலை.
எனக்கப்போதுதான் கொஞ்சம் சுரீரென்று உறைத்தது.
“அம் ரியலி சாரி,இதுல இவ்வளவு விஷயம் இருக்கும்போது,நானும் இளாவும் உங்கள திட்டிட்டோம்,யு ஆர் ரியலி டிஃப்ரெண்ட்!”
அதே பழைய சிரிப்பை இப்பொதும் மென்மையாய் முகத்தில் படர விட்டான்.அடுத்த ரயில் வருவது தெரிந்தது.இப்போது கிளம்பினால் சரியாக மதிய உணவுக்கு அலுவலகம் செல்ல நேரிடும்.பரவாயில்லை,இன்று மாலை அதிகப்படியாக இரண்டு மணிநேரம் உழைத்துக்கொள்ளலாம்.
 “உங்க நம்பர் குடுக்க முடியுமா,இஃப் யு ஆர் ஓகே?”
என் எண்ணைக்கொடுத்து அவன் எண்ணை வாங்கி  அவசர அவசரமாக  பண்டமாற்றி எச்சரிக்கையாக நான் பெண்கள் பெட்டியிலும் அவன் முதல் வகுப்பிலும் ஏறினோம்.முதலிலேயே பெண்கள் பெட்டியில் ஏறியிருந்தால் இன்று இந்த சம்பவம் நடந்திருக்காது.கடவுளுக்கு ஒரே நேரத்தில் நன்றியும் சாரியும் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது.முதல்வகுப்புப்பெட்டியிலிருந்து அவன் ஒருமுறை தொங்கியவாறு திரும்பிப்பார்த்தான்.நான் உள்ளே போய் மறைந்தேன்.
அவன் கதையை கேட்டதும் மனம் குழம்பத்தொடங்கியது.சரியாக அவன் என்னைப்பார்த்துவிட்டு போன ஒரு வாரத்திற்குப்பிறகு நான் என்ன செய்ய வேண்டுமென எனக்குப் புரிந்தது.இப்போதைக்கு திருமணத்திற்கு ஒரு இடைவெளியும் என் மனதிற்கேற்ற ஒரு மாற்றமும் தேவைப்பட்டது.சின்ன வயதிலிருந்தே சிவில் சர்வீசஸ் மீது ஈர்ப்பு உண்டெனக்கு.என்றாலும் படித்து முடித்தவுடன் வேலை,பிரச்சினையில்லாத வாழ்க்கை என எதை பற்றியும் யோசிக்காமல் இருந்தேன்.இவன் மறுத்ததும் எதையோ யாருக்கோ நிரூபிக்க எண்ணியே சிவில் சர்வீசஸ் தேர்வெழுத ஆசைப்பட்டேன்.அடுத்த வாரத்திலிருந்து வகுப்புகள் ஆரம்பம்.முதல்முறையாக வாழ்க்கையில் குழம்பாமல் ஒரு முடிவு எடுத்ததாக எண்ணினேன்.
இதென்ன இப்போது இவனது மறுநுழைவு?
ஏன் எப்போதும் எனக்கு இரவின் தெளிவைத்தந்துவிட்டு அதில் ஒரு குழந்தையின் கூச்சலையும் கொடுக்கிறார்கள்?ஆனால் நான் தெளிவாக இருக்கிறேன்.எனக்கு எந்த சலனமும் வேண்டாம்.அந்த எண்ணை அழித்துவிடப் போகிறேன்.
டெலிட்டில் கையை வைக்கும்போது அவனிடம் இருந்து ஒரு குறுந்தகவல்
“I am getting down.c u tomo.nice to c u.”
நாளைக்குமா?!இது எங்க போய் முடியுமோ!நான் அந்த எண்ணை அழித்தேனா என்று கேட்கும் அளவுக்கு சிறுகுழந்தையாக இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அன்று அலுவலகம் முடிந்து வந்ததும் மூன்று வாலுகளும் ஒன்றாக மாடிக்குப் போனோம்.இன்று எங்களுக்கு நிலாச்சோறு நாள்.மாதத்தின் முதல் திங்கள் நிலாச்சோறு நாள்,வார்டனுக்கு தெரியாமல்தான்.ஓட்டலில் வாங்கி வந்திருந்த சாப்பாட்டை உள்ளே அனுப்பிக்கொண்டே கதையை சொல்லி முடித்தேன்.
“பரவால்லப்பா நல்ல பையனாத்தான் தெரியறான்”-அச்சு.
“ஹ்ம்ம்ம் அப்ப அவனுக்கு வாழ்க்க கொடுத்திற வேண்டியதுதான்”-லவ்.
“அவன் என்ன நெனக்கிறானோ,யாருக்கு தெரியும்,நான் பாட்டுக்கு ஒழுங்கா சிவில் சர்வீசஸ் படிக்க போறேன்”-சீதாவாகிய நான்.
“போடி பாட்டி,நீ போய் சிவில் சர்வீசஸ் படிக்க போறியா,இந்து பேப்பர்கூட படிக்க மாட்ட”-லவ்
“ஹேய் லூசு...முக்கியமான விஷயம் அந்த அருந்ததி யாருன்னு கேட்டியா?”-இளா
ஆமா இல்ல,அந்த அருந்ததி யாரு???

Monday, April 18, 2011

ஜே.ஜே : சில குறிப்புகள் -சுந்தர ராமசாமி

ஜே ஜே: சில குறிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு புனைவு என்று சில இடங்களில் படித்திருக்கிறேன்.படிக்கத் தொடங்கியவுடன்,  
“வெளிவாசலை யாரோ பூட்டிவிட்டார்கள் என்பதை ஜே.ஜே கண்டுகொண்டான்.அதுவரையிலும் அவன் பயணம் தொடர்ந்திருந்தது.எருமைகளோ கழுத்துச் சங்கிலியுடன்,அவையே கழித்த சாணிமீது சரிந்து,உதிரி வைக்கோலை அரை மயக்கத்தில் அசைபோட்டுக்கொண்டு கிடக்கின்றன” 
என்னும் வரிகள் இவன் தான் ஜேஜே என கோடிட்டு காட்டுகின்றன.அதுமட்டுமல்ல ஜே.ஜே,அவன் ஒரு கேள்வியாளன்,சிந்தனைவாதி எல்லாவற்றையும்விட அதிகமாய் அவன் ஒரு ரசிகன்,கலைஞன்,தச்சன்,ஓவியன் அந்த நிமிடத்தை வாழ்பவன்,சில சமயம் அந்த நிமிடம் நகர்ந்த பின்னும் அதிலேயே வாழ்பவன்,அதைத்தாண்டியும் பார்க்கத் தெரிந்தவன்.மேற்சொன்ன வரிகளை எழுதிய சுபத்திரம்மா தங்கச்சியை பற்றி இக்கண்ட வாரியார் என்னும் விமர்சகர்  “அவள் பார்க்கப் பார்க்க பெண்போல் காட்சியளிக்கக்கூடியவள்”, என்று சொன்ன வார்த்தைகள்…இந்த வார்த்தைகளில் உங்களுக்கு அதிசயிக்க அப்படி ஏதாவது தெரிகிறதா?நான் திரும்ப திரும்ப இந்த வரிகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.எனக்குள் சுபத்திரம்மா தங்கச்சிக்கு ஒரு உருவம் எழத்தொடங்கியது.இத்தனைக்கும் அவர் பெயர் இன்னும் ஒரே இடத்தில் மட்டுமே வருகிறது.
ஜேஜே இறந்ததும் எழுத்தாளர் சிட்டுக்குருவி அவருக்கு அளிக்கும் அஞ்சலி தமிழ் எழுத்தாளனின் சாபக்கேட்டையும்,உள்ளொளிக்கு சற்றும் குறைவில்லாமல் ட்யுப்லைட் ஒளி பளீரென்று எரிவதையும் காட்டுகிறது.பாலு என்னுமிந்த எழுத்தாளன் எதற்காக தமிழல்லாத எழுத்தாளனொருவனை பற்றி இவ்வளவு மெனக்கெட்டு எழுத வேண்டும் என தோன்ற இடம் கொடுக்காமல் எழுத்தாளரே சொல்கிறார்,
“காஃப்கா என்கிறோம்,சிமோன் த பூவா என்கிறோம்,குட்டிக்கிருஷ்ண மாராரை தெரியாது என்கிறோம்,கோபாலகிருஷ்ண அடிகாவைத்தெரியாது என்கிறோம்,எப்படியிருக்கிறது கதை?”.நியாயம்தானே?
எதற்காக ஜே.ஜே அத்தனை எழுத்தாளர்களில்?ஜே.ஜேவுக்கும் பாலுவுக்கும் உள்ள உறவை துரோணருக்கும்,ஏகலைவனுக்கும் உள்ள உறவாகக்கூட காண முடியாது.இருவரில் ஒருவர் மட்டுமே இன்னொருவரை அதிகம் அறிந்திருக்கிறார்.பாலுவுக்கு ஜே.ஜேவை கண்டு கசியும் உணர்வு ப்ரியமா,ஆகர்ஷமா?தான் ஆக விரும்பியதை வேறொருவன் ரத்தமும் சதையுமாக ஆகியிருப்பதை கண்டு வெதும்பும் இயலாமையை, உணர்வடுக்குகள்மேல் ஜே.ஜே வீசும் எரிகுண்டுகளை பாலுவால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடிவதேல்லை.
ஜே.ஜே கலைமகள் கடாட்சம் பெற்றவன்.பாலு தன்வந்திரி பகவான் கடைக்கண் கொண்டு பார்க்க வேண்டியவன்.ஜே.ஜே எவருக்காகவும் அமிலத்தில் தண்ணீர் கலப்பதில்லை.பாலுவே சொல்வது போல் ‘உண்மை எதிர்மறையாக்கப் படுமானால் அதிக அழுத்தம் கொடுத்து சொல்பவன்’.அவனுக்கெதிரில் திருச்சூரும், முல்லைக்கல்லும் ஒன்றுதான்.தேனிலவின் போலி குளிர்ச்சிகூட அவனை ஏமாற்ற முடியாது.உம்மினிக்குட்டியைத்தான் சொல்கிறேன்!
எனக்கு ஒன்றுணர்வை தந்த பகுதி ரமணியும்,பாலுவும் மரப்பாச்சிக்கு வைத்தியம் பார்க்கும் இடம்.ரமணி சின்னக்குழந்தையைப்போல மரப்பாச்சியை பார்த்துக்கொள்வதும்,பாலு தன்னால் ரமணியைப்போல் பொம்மையுடன் பேச முடியவில்லையே என ஏங்குவதும் அழகு.நண்பனின் கனவை ஓவியமாக்குகிறான் ஜே.ஜே,இரண்டாம் முறை நண்பன் சம்பத்துக்கு அதே கனவு வந்ததும் ஓட்டமாய் விரைந்து முக்கியமான விஷயம் என்று சொல்லி உறங்கிக்கொண்டிருக்கும் ஜே.ஜேவை எழுப்பிச் சொல்கிறான், “ஜே.ஜே மறுபடியும் நான் அற்புதமான சூரியோதயத்தைக்கண்டேன்”.இப்படிப்பட்ட நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும்.
நால்வரின் நினைவு மற்றும் எழுத்துத் தொகுப்புகள்தான் கதை. பாலு,அரவிந்தாட்ச மேனன்,சம்பத்,ஜே.ஜே.இதில் சம்பத்துடைய நாட்குறிப்பு கொஞ்சம் சுவாரஸ்யமின்றி போனதாய் உணர்ந்தேன்,மற்ற மூவருடன் ஓப்பிடுகையில்.அதேபோல் இன்னொரு பின்னூட்ட விமர்சனம் வலைத்தளத்தில்(நன்றி-பரம்ஸ்) ஜே.ஜே யாசகம் கேட்ட குஷ்டரோகிக்கு காசிட யோசிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் பற்றியது.ஒருவருடன் உரையாடலைத் துவக்க ஐந்து நிமிடம் யோசிக்கிறோம்,கடன் கேட்க சில மணி நேரங்கள் யோசிக்கிறோம்,பிச்சையிட பத்து நிமிடம் யோசிக்க முடியாதா என்ன?அது அவரவரது சிந்தனை இயங்கும் தளத்தையும்,வேகத்தையும் பொறுத்தது.
கடைசி கடைசியாய் பின்னுரையைப் படித்தபோது ஒரு சின்ன ஏமாற்றம்.நான் அத்தனை நெருக்கமாய் உணர்ந்த அரவிந்தாட்ச மேனன்,சுபத்திரம்மா தங்கச்சி,சாராம்மா இவர்கள் யாருமே உண்மையில்லையா?அதுவரை ஒரு கேரள எழுத்தாளனின் உறவுகள்,உணர்வுகள்,சிந்தனைகளின் வாழ்க்கை விளக்க நூல் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.எதுவும் தோன்றாமல் அரவிந்தாட்ச மேனன் பேனாவில் மை ஏற்றும் காட்சி தோன்றியது.புனைவென்றே தெரியாமல் ஒரு புனைவை படித்திருக்கிறேன்.நானென்ன பெரிய விஷயம், கேரள எழுத்தாளரொருவரே ஏமாந்திருக்கிறார்.வாசகருக்கு புதிய அனுபவமும்,விமர்சகனுக்கு கொஞ்சம் குழப்பமும் என பின்னுரையில் இப்புதினம் பற்றி படித்த ஞாபகம்.நான் விமர்சகியல்ல என்பதால் எனக்கு மிக நெருக்கமாகவும் ஈர்க்கக்கூடியதுமாக உணர்ந்தேன் ஜே.ஜேவை.
மொத்தத்தில் இக்கண்ட வாரியாரின் பாணியில் சொல்வதனால் “படிக்கப் படிக்க மாய உண்மையாய்த் தோன்றும் புனைவிது...”