Monday, April 18, 2011

ஜே.ஜே : சில குறிப்புகள் -சுந்தர ராமசாமி

ஜே ஜே: சில குறிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு புனைவு என்று சில இடங்களில் படித்திருக்கிறேன்.படிக்கத் தொடங்கியவுடன்,  
“வெளிவாசலை யாரோ பூட்டிவிட்டார்கள் என்பதை ஜே.ஜே கண்டுகொண்டான்.அதுவரையிலும் அவன் பயணம் தொடர்ந்திருந்தது.எருமைகளோ கழுத்துச் சங்கிலியுடன்,அவையே கழித்த சாணிமீது சரிந்து,உதிரி வைக்கோலை அரை மயக்கத்தில் அசைபோட்டுக்கொண்டு கிடக்கின்றன” 
என்னும் வரிகள் இவன் தான் ஜேஜே என கோடிட்டு காட்டுகின்றன.அதுமட்டுமல்ல ஜே.ஜே,அவன் ஒரு கேள்வியாளன்,சிந்தனைவாதி எல்லாவற்றையும்விட அதிகமாய் அவன் ஒரு ரசிகன்,கலைஞன்,தச்சன்,ஓவியன் அந்த நிமிடத்தை வாழ்பவன்,சில சமயம் அந்த நிமிடம் நகர்ந்த பின்னும் அதிலேயே வாழ்பவன்,அதைத்தாண்டியும் பார்க்கத் தெரிந்தவன்.மேற்சொன்ன வரிகளை எழுதிய சுபத்திரம்மா தங்கச்சியை பற்றி இக்கண்ட வாரியார் என்னும் விமர்சகர்  “அவள் பார்க்கப் பார்க்க பெண்போல் காட்சியளிக்கக்கூடியவள்”, என்று சொன்ன வார்த்தைகள்…இந்த வார்த்தைகளில் உங்களுக்கு அதிசயிக்க அப்படி ஏதாவது தெரிகிறதா?நான் திரும்ப திரும்ப இந்த வரிகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.எனக்குள் சுபத்திரம்மா தங்கச்சிக்கு ஒரு உருவம் எழத்தொடங்கியது.இத்தனைக்கும் அவர் பெயர் இன்னும் ஒரே இடத்தில் மட்டுமே வருகிறது.
ஜேஜே இறந்ததும் எழுத்தாளர் சிட்டுக்குருவி அவருக்கு அளிக்கும் அஞ்சலி தமிழ் எழுத்தாளனின் சாபக்கேட்டையும்,உள்ளொளிக்கு சற்றும் குறைவில்லாமல் ட்யுப்லைட் ஒளி பளீரென்று எரிவதையும் காட்டுகிறது.பாலு என்னுமிந்த எழுத்தாளன் எதற்காக தமிழல்லாத எழுத்தாளனொருவனை பற்றி இவ்வளவு மெனக்கெட்டு எழுத வேண்டும் என தோன்ற இடம் கொடுக்காமல் எழுத்தாளரே சொல்கிறார்,
“காஃப்கா என்கிறோம்,சிமோன் த பூவா என்கிறோம்,குட்டிக்கிருஷ்ண மாராரை தெரியாது என்கிறோம்,கோபாலகிருஷ்ண அடிகாவைத்தெரியாது என்கிறோம்,எப்படியிருக்கிறது கதை?”.நியாயம்தானே?
எதற்காக ஜே.ஜே அத்தனை எழுத்தாளர்களில்?ஜே.ஜேவுக்கும் பாலுவுக்கும் உள்ள உறவை துரோணருக்கும்,ஏகலைவனுக்கும் உள்ள உறவாகக்கூட காண முடியாது.இருவரில் ஒருவர் மட்டுமே இன்னொருவரை அதிகம் அறிந்திருக்கிறார்.பாலுவுக்கு ஜே.ஜேவை கண்டு கசியும் உணர்வு ப்ரியமா,ஆகர்ஷமா?தான் ஆக விரும்பியதை வேறொருவன் ரத்தமும் சதையுமாக ஆகியிருப்பதை கண்டு வெதும்பும் இயலாமையை, உணர்வடுக்குகள்மேல் ஜே.ஜே வீசும் எரிகுண்டுகளை பாலுவால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடிவதேல்லை.
ஜே.ஜே கலைமகள் கடாட்சம் பெற்றவன்.பாலு தன்வந்திரி பகவான் கடைக்கண் கொண்டு பார்க்க வேண்டியவன்.ஜே.ஜே எவருக்காகவும் அமிலத்தில் தண்ணீர் கலப்பதில்லை.பாலுவே சொல்வது போல் ‘உண்மை எதிர்மறையாக்கப் படுமானால் அதிக அழுத்தம் கொடுத்து சொல்பவன்’.அவனுக்கெதிரில் திருச்சூரும், முல்லைக்கல்லும் ஒன்றுதான்.தேனிலவின் போலி குளிர்ச்சிகூட அவனை ஏமாற்ற முடியாது.உம்மினிக்குட்டியைத்தான் சொல்கிறேன்!
எனக்கு ஒன்றுணர்வை தந்த பகுதி ரமணியும்,பாலுவும் மரப்பாச்சிக்கு வைத்தியம் பார்க்கும் இடம்.ரமணி சின்னக்குழந்தையைப்போல மரப்பாச்சியை பார்த்துக்கொள்வதும்,பாலு தன்னால் ரமணியைப்போல் பொம்மையுடன் பேச முடியவில்லையே என ஏங்குவதும் அழகு.நண்பனின் கனவை ஓவியமாக்குகிறான் ஜே.ஜே,இரண்டாம் முறை நண்பன் சம்பத்துக்கு அதே கனவு வந்ததும் ஓட்டமாய் விரைந்து முக்கியமான விஷயம் என்று சொல்லி உறங்கிக்கொண்டிருக்கும் ஜே.ஜேவை எழுப்பிச் சொல்கிறான், “ஜே.ஜே மறுபடியும் நான் அற்புதமான சூரியோதயத்தைக்கண்டேன்”.இப்படிப்பட்ட நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும்.
நால்வரின் நினைவு மற்றும் எழுத்துத் தொகுப்புகள்தான் கதை. பாலு,அரவிந்தாட்ச மேனன்,சம்பத்,ஜே.ஜே.இதில் சம்பத்துடைய நாட்குறிப்பு கொஞ்சம் சுவாரஸ்யமின்றி போனதாய் உணர்ந்தேன்,மற்ற மூவருடன் ஓப்பிடுகையில்.அதேபோல் இன்னொரு பின்னூட்ட விமர்சனம் வலைத்தளத்தில்(நன்றி-பரம்ஸ்) ஜே.ஜே யாசகம் கேட்ட குஷ்டரோகிக்கு காசிட யோசிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் பற்றியது.ஒருவருடன் உரையாடலைத் துவக்க ஐந்து நிமிடம் யோசிக்கிறோம்,கடன் கேட்க சில மணி நேரங்கள் யோசிக்கிறோம்,பிச்சையிட பத்து நிமிடம் யோசிக்க முடியாதா என்ன?அது அவரவரது சிந்தனை இயங்கும் தளத்தையும்,வேகத்தையும் பொறுத்தது.
கடைசி கடைசியாய் பின்னுரையைப் படித்தபோது ஒரு சின்ன ஏமாற்றம்.நான் அத்தனை நெருக்கமாய் உணர்ந்த அரவிந்தாட்ச மேனன்,சுபத்திரம்மா தங்கச்சி,சாராம்மா இவர்கள் யாருமே உண்மையில்லையா?அதுவரை ஒரு கேரள எழுத்தாளனின் உறவுகள்,உணர்வுகள்,சிந்தனைகளின் வாழ்க்கை விளக்க நூல் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.எதுவும் தோன்றாமல் அரவிந்தாட்ச மேனன் பேனாவில் மை ஏற்றும் காட்சி தோன்றியது.புனைவென்றே தெரியாமல் ஒரு புனைவை படித்திருக்கிறேன்.நானென்ன பெரிய விஷயம், கேரள எழுத்தாளரொருவரே ஏமாந்திருக்கிறார்.வாசகருக்கு புதிய அனுபவமும்,விமர்சகனுக்கு கொஞ்சம் குழப்பமும் என பின்னுரையில் இப்புதினம் பற்றி படித்த ஞாபகம்.நான் விமர்சகியல்ல என்பதால் எனக்கு மிக நெருக்கமாகவும் ஈர்க்கக்கூடியதுமாக உணர்ந்தேன் ஜே.ஜேவை.
மொத்தத்தில் இக்கண்ட வாரியாரின் பாணியில் சொல்வதனால் “படிக்கப் படிக்க மாய உண்மையாய்த் தோன்றும் புனைவிது...”

No comments:

Post a Comment